பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட 16வயது சிறுமியால் பரபரப்பு

தேனி அருகே 16வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர், கணவர் உள்ளிட்ட 5பேர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவமனையில் 16வயது சிறுமி ஒருவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமி சின்னமனூரைச் சேர்ந்த, விவசாயக்கூலித் தொழிலாளியின் மகள் என்பது தெரியவந்தது.

மேலும், 10ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, குடும்பவறுமை காரணமாக, ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமிக்கு நடந்த குழந்தை திருமணம் குறித்து கொடுத்த புகாரில், உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் பெற்றோர், கணவர் மணி, மணியின் தாயார் மற்றும் தம்பி ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, மணியை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version