போலியான ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்த தலைமை காவலர்!

ராமநாதபுரத்தில் தந்தை பெயரை மாற்றி, போலியான ஆவணங்கள் மூலம் காவல்துறை பணியில் சேர்ந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு அபிராமம் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது இவர் பதவி உயர்வு பெற்று மதுரையில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் நிலையில், தந்தை பெயரை மாற்றி சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களில் முருகன் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்துள்ளது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தலைமை காவலர் முருகன் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version