ஜெயலலிதா வழியில் மக்களை தேடி மருத்துவம் – அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டத்தில், புயலால் சேதமடைந்த பயிர்கள், வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த முத்துப்பேட்டை, தொண்டியக்காடு பகுதியில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் காமராஜ் திறந்துவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படுவது, மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் மக்களைத் தேடி மருத்துவம் என்பதைப்போல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்பதைக் காட்டுகிறது என்றார்.

மேலும், அம்மா மினி கிளினிக்குகள், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

Exit mobile version