உலக சிக்கன நாளையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

உலக சிக்கன நாளையொட்டி அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயனடை வேண்டுமென தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் அவசியத்தையும் உணர்ந்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 உலக சிக்கன தினமாக கொண்டாடப்படுவதாக தெரிவித்துள்ளார். சிக்கனமும், சேமிப்பும் ஒன்றோடுடொன்று நெருங்கிய தொடர்புடையவை என்றும், சிக்கனமாக வாழ்ந்தால் தான் சேமிக்க முடியும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

சேமித்தால் தான் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும் என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். .தமிழக அரசின் சிறுசேமிப்புத் துறையும், மத்திய அரசின் அஞ்சலக துறையும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்கள் பாதுகாப்பனதாகவும், அதிக வட்டியளிக்கக் கூடியதுமாக உள்ளதாகவும், அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதால் உத்தரவாதமும், எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பும் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக சிக்கன நாளில், தமிழ்நாடு மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயனடை வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Exit mobile version