2ம் கட்ட மெட்ரோ சேவை தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே, ஜனவரி 21 ம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தை நினைவுகூர்ந்துள்ள அவர், முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை, 50 க்கு 50 என்ற விகிதத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் நிதியைக் கொண்டு தொடங்கப்பட்டதாகவும், 2015 ஆம் ஆண்டு முதல் பயணிகள் பயணிக்கும் வகையில் ரயில் சேவை தொடங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது முதல் கட்ட மெட்ரோ திட்டம் முழுவதும் முடிவடைந்து, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ சேவைக்கான திட்டத்திற்கும், முதல் கட்ட சேவைக்கான திட்டத்தைப் போலவே, 50 க்கு 50 என்ற விகிதத்தில், மத்திய, மாநில அரசுகள் அதற்கான நிதியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஆவன செய்து, ஒப்புதல் வழங்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version