சிறந்த நெசவாளர்கள் 27 பேருக்கு விருது வழங்கி முதலமைச்சர் பாராட்டு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைத்தறி நெசவாளர்கள் 27 பேருக்கு விருதுகள், பரிசுத் தொகைகளை வழங்கியதுடன், கைத்தறி துணிநூல் துறைக்கான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்த நெசவாளர், சிறந்த வடிவமைப்பாளர், திறன்மிகு நெசவாளர் ஆகிய 3 தலைப்புகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த 3 பிரிவுகளிலும் விருது பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 75ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாய் ஆகியவற்றுக்கான காசோலைகள் சான்றிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிப் பாராட்டினார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் திருச்செங்கோடு சரக உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கூட்டுறவு நூற்பாலைகளில் பணிக்காலத்தில் காலமான தொழிலாளர்களின் குடும்பத்தைச் சார்ந்த வாரிசுதாரர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version