முதலமைச்சர் கொடி நாள் வாழ்த்து – பொதுமக்களுக்கு வேண்டுகோள்

நாளை நாடு முழுவதும் கொடி நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் இறையாண்மையை காத்திடும் உயரிய சேவையில், தங்களை ஈடுபடுத்தி கொண்ட முப்படை வீரர்களின் தியாக உணர்வுக்கு, நாம் நன்றிக் கடன் செலுத்தும் வகையில், ஆண்டு தோறும் டிசம்பர் 7ம் தேதி படைவீரர்களின் கொடி நாளாக அனுசரிக்கப்படுவதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த நாளில் படைக்களத்தில் விழுப்புண்களை ஏற்று, தமது இன்னுயிரை ஈந்த எண்ணற்ற படை வீரர்களது தியாகத்தையும், சேவையையும் நாம் மனதார போற்றுகின்ற அதே வேளையில், அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை நல்குவதற்கு நாம் கடைமைப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விடுதலையை காப்பாற்றும் பெரும் பணியில் ஈடுபட்ட முப்படை வீரர்களின் குடும்பத்தாரின் நலனைக் காப்பதில், தமிழ்நாடு என்றென்றும் முன்னணியில் திகழ்கின்ற தனிப் பெருஞ்சிறப்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இனிய நாளில், முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதலமைச்சர், முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையிலும், தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையிலும், கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியினை வழங்கிட வேண்டுமென முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version