ஆவின் நிறுவனத்தின் 5 பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்!

ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவின் மோர் மற்றும் சாக்கோ லெஸ்ஸி உள்ளிட்ட 5 பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவின் மோர் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல், சாக்கோ லெஸ்லி மற்றும் மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், ஆவின் டீ மேட் பால் ஆகிய 5 பொருட்களை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். கொரோனா வைரஸ் தொற்று காலக்கட்டத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பொருட்கள் சேர்த்து புதிய ஆவின் மோர் அறிமுகப்படுத்தப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் 200 மில்லி லிட்டர் பாட்டில், 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 நாட்கள் வரை கெடாத சமன்படுத்தப்பட்ட பால், தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் அதிக அளவிலான டீ மற்றும் காபி தயாரிப்பதற்கு உபயோகமாக ஆவின் டீ மேட் பால் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம், பால்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version