புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு

இந்திய அளவில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான ARIIA எனப்படும் தரவரிசைப்பட்டியலை, மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் சென்னை ஐஐடி கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த நிலையில், இந்த ஆண்டும் முதலிடத்தை வென்று தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. டெல்லியில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு, இந்த ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டார். மாநில அரசுகளின் பல்கலைக்கழக பட்டியலில் பெரியார் பல்கலைக்கழகம், நான்காவது இடத்தில் உள்ளது. மாநில அரசு கல்லூரிகள் மற்றும் மாநில அரசின் உதவி பெறும் கல்லூரிகள் பட்டியலில், கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Exit mobile version