கோட்டூர்புரத்தில் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்

கோட்டூர்புரத்தில் மியாவாக்கி காடுகள் உருவாக்க செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அதே பகுதியில் பூங்கா, விளையாட்டு வளாகம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னையில் கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளை மீட்டெடுத்து பழைய நிலைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கூவம் அடையாறு தூர்வாரப்பட்டு வெள்ளத்தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன் கரையோர பகுதிகளில் உள்ள மக்களை மறுகுடியமர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.
 
இதற்கிடையில் சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை கோட்டூர்புரத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா ஒன்று அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
 
கோட்டூர்புரத்தில் சமீபத்தில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலத்தில்10 ஏக்கர் பரப்பளவில் பூங்காவும், 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு வளாகமும் அமைக்கப்படுகிறது.
 
23 ஆயிரத்து 340 கன மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்தப் பூங்காவில் நடைபாதை, சைக்கிள் பாதை, குழந்தைகள் விளையாடுவதற்கான கூடம், உணவகங்கள் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்படுகின்றன.
 
பூங்கா அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் உள்பட பல்வேறு துறைகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தபட்டுவருகிறது.
 
அடையாறின் கரையோரமாக கால்பந்து, கூடைபந்து, இறகுப்பந்து உள்ளிட்ட பல்வேறு மைதானங்கள் அமைத்து, பொதுமக்களின் பொழுது போக்கு வளாகமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது

Exit mobile version