தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில், அடுத்த 24 மணிநேரத்திற்கு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு, கடலோர மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு ஒடிசா கடலோர பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடலோர பகுதிகளில் காற்றானது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version