அடுத்த 24 மணி நேரத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு உள் கர்நாடக நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறைக்காற்று வீசும் என்பதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதி, கேரளா, கர்நாடக கடலோர பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version