மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 3 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகியவற்றில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் 23ந் தேதி, தமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது ஒரு வரலாற்று சாதனை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி வழங்கிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 2 ஆயிரத்து 925 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 755 கோடி ரூபாய் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு சார்பாக ஆயிரத்து 170 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version