ஊரடங்கை 5 வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை?

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, கடந்த மார்ச் 25 ம் தேதி முதல், நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. நோய் பரவலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இதுவரை 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மே 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், 5வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன், மேலும் சில தளர்வுகளை அளித்து, ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version