"ஒமிக்ரான் கொரோனா" காரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான தளர்வுகளை நீக்கிய மத்திய அரசு

புதிய வகை ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கான புதிய வழிகாட்டுதலை அறிவித்துள்ளது.

தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இதையடுத்து, வழக்கமான சர்வதேச விமான சேவைகள் மீண்டும் இயக்கும் முடிவை ஆய்வு செய்து வரும் மத்திய அரசு, வெளிநாட்டு பயணிகளுக்கான விதிமுறைகளை வகுத்துள்ளது.

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளை ஆபத்தில் உள்ள நாடுகளாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. அதன்படி, தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றை ஆபத்தில் உள்ள நாடுகளாக பட்டியலிட்ட மத்திய அரசு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான தளர்வுகளையும் நீக்கியது.

மேலும், அந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் முந்தைய 14 நாட்கள் எங்கெங்கு சென்றார்கள் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், விமான நிலையத்தில் நடத்தப்படும் RTPCR பரிசோதனையின் முடிவுகள் வரும் வரை அங்கேயே காத்திருக்க வேண்டும் என்றும் பரிசோதனையில் நெகடிவ் என தெரியவந்தாலும், வீட்டுத்தனிமை கட்டாயம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Exit mobile version