கூடுதலாக 12,660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் வெங்காயத்தின் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12 ஆயிரத்து 660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் பெய்த கனமழையால், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. வெங்காயத்தின் தட்டுப்பாட்டை போக்க எகிப்தில் இருந்து 40 ஆயிரம் டன் வெங்காயம் மும்பை துறைமுகத்தில் இறங்கியது. இந்த வெங்காயங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூடுதலாக 12 ஆயிரத்து 660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இம்மாதம் 27-ம் தேதி இந்த வெங்காயம் இறக்குமதி ஆகும் என்றும், இதனால் வெங்காயத் தட்டுப்பாடு குறைவதோடு வெங்காயத்தின் விலையும் கணிசமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில்,மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், வெங்காய பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

Exit mobile version