சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது…

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கி மார்ச் 30-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.  இதில், 137 வகையான பாடப்பிரிவுகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளார்.அதில், 110 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், 19 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், 8 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.  இதில் காலை 10 மணி முதல் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . விடைத்தாளின் முதல் பக்கத்தில் பெயர், பதிவு எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்புவதற்காக 10.15 மணி வரை 15 நிமிடங்களும்,10.15 மணிக்கு வினாத்தாள்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாளை வாசிப்பதற்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் 10.30 மணிக்கு தேர்வு தொடங்கும் எனவும் தேர்வு கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

Exit mobile version