காவேரி,வைகை,குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

காவேரி,வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவரம் தமிழக பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

காவேரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில், நன்றி அறிவிப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திலகர் திடலில் இருந்து மாட்டு வண்டியில்  அழைத்துவரப்பட்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பேசினர்.

பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் காவேரி,வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதற்கட்டமாக 7 ஆயிரத்து 667 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும், இதற்கான முதற்கட்ட நிதி பற்றிய விவரத்தை பட்ஜெட்டில் அறிவிப்பில் முதல்வர் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.  

Exit mobile version