தமிழகத்தில் புற்றுநோய் – சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் 12ல் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தின் புற்றுநோய் பாதிப்பு தொடர்பான அறிக்கையை அடையாறு புற்றுநோய் மையம் தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையை ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் வெளியிட்டனார். அதில் 2016 ஆம் ஆண்டு கணக்குப்படி, 65 ஆயிரத்து 590 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 28 ஆயிரத்து 971 பேர் ஆண்கள் என்றும், 36 ஆயிரத்து 619 பேர் பெண்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஆண்களை பொறுத்தவரையில், இரைப்பை, வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பேர் பாதிக்கபட்டுள்ளனர். பெண்களில் பெரும்பாலானோர் மார்பக புற்றுநோய்க்கும், கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் ஆளாகியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 78 ஆயிரத்து 641 ஆக அதிகரிக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிறந்த குழந்தையிலிருந்து 74 வயதுக்குட்பட்ட முதியோர் வரை, தமிழகத்தில் 12-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version