காட்பாடியில் கனரா வங்கி மேலாளர் தயாநிதி வீட்டில் சோதனை

காட்பாடியில் உள்ள கனரா வங்கி மேலாளர் வீட்டிலும், திமுக பிரமுகர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. சுமார் 11 கோடி ரூபாய் பணம் திமுக பிரமுகர்கள் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்காளருக்கு ஓட்டுக்காக வழங்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள கனரா வங்கி மேலாளர் தயாநிதி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சேதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் வீட்டிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version