மத்திய அரசின் புதிய கட்டண கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கேபிள் டி.வி பொது நலச்சங்கத்தினர் இன்று ஒருநாள் ஒளிபரப்பு நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். புதிய கட்டண கொள்கை முழுவதுமாக ஒளிபரப்பாளர்களுக்கு சாதகமாக இருப்பதோடு கேபிள் டி.வி ஆபரேட்டர்களையும் பாதிக்கும் என கூறப்படுகிறது. மேலும் பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தின் அளவு அதிகரிக்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி கார்ப்பரேசன் உள்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேபிள் சேவையை வழங்கி வரும் நிலையில் இந்தப் புதிய கொள்கையால் அரசு கேபிள் டி.வி கார்ப்பரேசன் கூடுதல் நிதியைச் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என கூறப்படுகிறது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் மற்றும் ஒளி பரப்பாளர்களை கலந்து பேசி இந்தப் புதிய கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் அதுவரை முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒளிபரப்பு நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.