எஸ் வங்கி மறு கட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எஸ் வங்கி நிர்வாகத்தை மறுகட்டமைப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட எஸ் வங்கி, வாராக்கடன் அதிகரித்ததால், நிதி நெருக்கடிக்கு ஆளாகி திவாலாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்கலாம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்பேரில் எஸ் வங்கி நிர்வாகத்தை மறு கட்டமைப்பு செய்யும் வகையில், புதிய இயக்குநர்கள் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

எஸ்பிஐ வங்கி, 49 சதவீதம் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 3 நாட்களில் தளர்த்தப்படும் என்றும் கூறினார்.

Exit mobile version