பணத்திற்காக கடத்தப்பட்ட தொழில் அதிபர்: கர்நாடகாவில் மீட்ட காவல்துறையினர்

வேலூரில் பணத்திற்காக கடத்தப்பட்ட தொழில் அதிபரை கர்நாடகாவில் காவல்துறையினர் உயிருடன் மீட்டனர்.

அத்தனூர் பகுதியை சேர்ந்த அருள் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல் காலை நடைப்பயிற்சி சென்ற அருளை மர்ம நபர்கள் துணியால் போர்த்தி காரில் வைத்து கடத்தி சென்றனர். பின்னர் அருளின் மகன் ராபினுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். தொடர்ந்து மீண்டும் தொலைபேசியில் ராபினை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் 50 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே அருளை உயிருடன் ஒப்படைக்க முடியும் என கூறியுள்ளனர். இது குறித்து அருளின் மனைவி அளித்த புகாரின் பேரில், ராபினுக்கு அழைப்பு வந்த தொலைபேசியின் டவரை கண்காணித்து, மூன்று தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டையில் அருளை மீட்ட பாதுகாப்பு படையினர் அவரை கடத்திய 4 பேர் கொண்ட மர்ம நபர்களையும் கைது செய்தனர்.

Exit mobile version