ஈரானுக்கு விளைவுகள் கடுமையாக இருக்கும் என பிரிட்டன் எச்சரிக்கை

சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை ஈரான் விடுவிக்கவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரிட்டன் வெளியுறவுச் செயலர் ஜெரிமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் வைத்து பிரிட்டனின் ஸ்டெனோ இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை ஈரான் ராணுவம் பறிமுதல் செய்துள்ளது. கப்பலில் இருந்த 23 ஊழியர்களும் ஈரான் வசம் உள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஈரான், தங்கள் நாட்டு மீன்பிடி படகு மீது, பிரிட்டன் கப்பல் மோதியதாகவும், எச்சரிக்கை விடுத்த போதும் நிற்காமல் சென்ற காரணத்தால் சிறை பிடித்ததாகவும், கூறியுள்ளது. விசாரணை முடியும் வரை, பிரிட்டன் கப்பல் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹண்ட், தங்கள் நாட்டுக் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். சுதந்திரமான கடற்பயணத்தை பேணிக் காப்பது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினை தற்போதே தீர்க்கப்படவில்லை என்றால், பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் ஜெர்மி ஹண்ட் ஈரானை எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்து எண்ணெய் டேங்கர் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகளை ஈரான் இராணுவம் வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி கப்பலில் இறங்க முயலும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் திரைப்பட பாணியில் கப்பலை சிறைப்பிடிக்கும் இந்த காட்சிகள், சர்வதேச கடல்சார் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Exit mobile version