போயிங் விமானங்களுக்கு தடைவிதிக்க மத்திய அரசு பரிசீலனை

இந்தியாவில் இயக்கப்படும் போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எத்தியோப்பியாவில் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், அந்நாட்டின் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த அக்டோபர் 29ம் தேதி இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து அந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதனால் சீனா, எத்தியோப்பியா நாடுகள் இந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன. சிங்கப்பூரும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த போயிங் 737 ரக விமானங்களை இந்தியாவில் இரண்டு தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. மொத்தம் 21 விமானங்கள் இயக்கப்பட்டுவரும் நிலையில், இந்த ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசனை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Exit mobile version