35 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் ரத்து

பல்வேறு நாடுகளின் தடை எதிரொலியால், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ரத்து செய்ய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த 10ம் தேதி விபத்துக்குள்ளானதில், இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில், 189 பேர் பலியாகினர். தொடர் விபத்துகளால், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.

இதையடுத்து, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க தற்காலிகமாக தடைவிதித்த நிலையில், நியூசிலாந்து, நார்வே, வியட்நாம், பிரிட்டன், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா கனடா உள்பட மேலும் பல நாடுகளும் இந்த ரக விமானங்களுக்கு தடைவிதித்தன.

இதன் காரணமாக, நேற்று 20 விமானங்களின் சேவையை ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் ரத்து செய்த நிலையில், இன்றும் 35 விமானங்களின் சேவையை ஸ்பைஸ் ஜெட் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

Exit mobile version