ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸே தடையாக உள்ளது – அமித் ஷா

ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸே தடையாக உள்ளதாக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பா.ஜ.க.வின் தேசிய கவுன்சில் கூட்டம் துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், எல்.கே. அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, பா.ஜ.க. ஆட்சியில் தான், 1.5 கோடி வரை சம்பாதிக்கும் தொழிலதிபர்களுக்கு 1 சதவீத வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்றும், இதன்மூலம் சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில் முனைவோர் பெருமளவில் பயன் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

ராமர் கோயிலை விரைவில் கட்ட வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் விருப்பம் என்றும், ராமர் கோயில் குறித்த உச்சநீதிமன்ற வழக்கை முடிக்க விடாமல், காங்கிரஸே தடையாக உள்ளது என்றும் கூறினார். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version