பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகை

ராமநாதபுரத்தில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.

மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் அமித் ஷா, அங்கிருந்து காரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்.இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தானில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஜே.பி நட்டா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக – பாஜக – பாமக கூட்டணியைப் பார்த்து திமுக – காங்கிரஸ் கூட்டணி அச்சமுற்று உள்ளதாக  கூறினார்.

இந்த கூட்டத்தில், மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 18 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. நிர்வாகிகளுக்கு தேர்தல் களப்பணிகள், வியூகம் குறித்து அமித் ஷா எடுத்துரைக்கவுள்ளார். பின்னர், ஹெலிகாப்டர் மூலமாக 12.30 மணிக்கு அவர் ராமநாதபுரம் செல்கிறார். அங்கு பட்டணம் காத்தான் பகுதியில், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

Exit mobile version