முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு தொடக்கம்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. ஒரு லட்சத்து 46,000பேர் பங்கேற்ற இந்த தேர்வில், தரவரிசை அடிப்படையில், 3,833 பேருக்கு நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு வழங்குவதற்கான 2 நாள் கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது.
 

Exit mobile version