வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எந்த இடையூறும் இல்லை:டிரம்ப்

வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

4 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேவை அவர் சந்தித்து பேசுகிறார். இந்தநிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளதில், தனது நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். தனக்கு அளித்த வாக்குறுதியை வடகொரிய அதிபர் காத்திடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் அபே இடையே இன்று நடைபெறும் சந்திப்பில், வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. குறைந்த தொலைவு சென்று தாக்கும் வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை ஐ.நா. தீர்மானங்களை மீறிய செயல் என்று ஜப்பான் தெரிவித்திருந்தது. இதனை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் ஆமோதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version