போட்டிக்கு முன்பே, காயம் அடைந்த இந்திய வீரர்: பிசிசிஐ மறுப்பு

இந்திய வீரர் ரோகித் சர்மா வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்ததாக வெளியான வதந்திகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.  முதல் ஒருநாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதும் அதிரடியாக ஆடிக் கூடியவர் ரோகித் சர்மா. இடதுக்கை பேட்ஸ்மேனான ஷிகர் தவானுடன் சேர்ந்து பலமுறை நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்துள்ளார். இந்நிலையில், வலைப்பயிற்சி மேற்கொண்ட ரோகித் சர்மாவின் வலது கை பெருவிரல் மீது பந்து தாக்கியதில், அவர் காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, ரோகித் சர்மாவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ரோகித் சர்மா குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஹிட்மேன் இஸ் ரெடி என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Exit mobile version