இந்தியாவை பிரதிநிதித்துவபடுத்தும் பிசிசிஐக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவில், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. மத்திய அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் இல்லாமல்,இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் தனியார் அமைப்பான பி.சி.சி.ஐ.க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டில்லியைச் சேர்ந்த கீதா ராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அரசு அமைப்பு என அறிவிக்க மறுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த எந்த சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது எனவும், பிரிட்டீஷ் காலத்தில் பின்பற்றப்பட்ட நட்சத்திர சின்னத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பயன்படுத்துவது சின்னங்கள் சட்டத்திற்கு விரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற நடவடிக்கையை தவறாக பயன்படுத்தும் வகையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், நட்சத்திர சின்னம் வர்த்தக பயன்பாட்டில் இல்லாததால் அது சின்னங்கள் சட்டத்தின் கீழ் வராது எனவும் குறிப்பிட்ட நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

Exit mobile version