நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உள்ளது.
விடியும் முன் என்ற படத்தை இயக்கிய பாலாஜி குமார் என்பவர், மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலுக்கான உரிமையை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகை நயந்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் என்ற அதே பெயரில் படம் வெளியிட இருப்பதாகவும், இது காப்புரிமையை மீறிய செயல் எனவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரியும், படத்தின் தலைப்புக்கு என தனியே காப்புரிமை கிடையாது என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தயாரிப்பாளர் தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எந்தப் படத்தின் தலைப்புக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை என தெரிவித்து, கொலையுதிர் காலம் படத்திற்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.