சேலத்தில் தடை செய்யப்பட்ட மீன்களை வளர்த்த பண்ணைகள் இடிப்பு

சேலத்தில் தடை செய்யப்பட்ட மீன்களை வளர்த்து வந்த பண்ணைகளை இடித்து அதிகாரிகள் அகற்றினர்.

3 முதல் 5 கிலோ எடை வரை வளரக்கூடிய ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை உண்பதால், பக்கவிளைவு ஏற்படுவதுடன் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் இந்தவகை மீன்களை வளர்ப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் சேலம் திருமணி முத்தாறு பகுதிகளில் குட்டை அமைத்து ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை வளர்த்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராமர் மற்றும் அருள் ஆகியோர் தங்களது நிலத்தில் குட்டைகள் அமைத்து ஆப்பிரிகன் கெளுத்தி மீன்களை வளர்த்து வந்ததுடன், அதனை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மீன் குட்டைகளை இடித்து அகற்றிய அதிகாரிகள், தண்ணீர் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியதுடன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version