முதலமைச்சர் பற்றி பேச, எழுத சாமுவேல் உள்ளிட்டோருக்கு தடை நீட்டிப்பு

முதலமைச்சருக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட விவகாரத்தில் வரும் ஜூன் 10ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு சாமுவேல் மேத்யூவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயன், மனோஜ் மற்றும் தெகல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூ உள்ளிட்ட 7 பேர் தன் மீது சுமத்திய அவதூறு குற்றச்சாட்டுக்காக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முதலமைச்சர் பற்றி பேசவும், எழுதவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேத்யூ தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, ஜுன் 10ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்று பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளதோடு, முதலமைச்சரை பற்றி பேசவும், எழுதவும் விதிக்கப்பட்டுள்ள தடையையும் அதுவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version