பி.ஏ. படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் பி.ஏ. படித்து விட்டு, போலி மருத்துவம் பார்த்து வந்த தம்பதியினரை சுகாதாரத்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார்கள் வந்தன. அவர் அளித்த உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் பள்ளிப்பட்டு பகுதியில் இயங்கி வந்த தனியார் கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை செய்த போது, அங்கு மருத்துவர்களாக பணி புரிந்த முரளி மற்றும் அவரது மனைவி இருவரும் மருத்துவம் படித்ததற்கான எவ்வித சான்றும் இல்லாமல் பணி செய்து வந்தது கண்டறியப்பட்டது. தம்பதியினரிடம் நடத்திய விசாரணையில், பி.ஏ படித்து லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்த முரளி கிளினிக் மூலம் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலி மருத்துவம் பார்த்து வந்த தம்பதியினரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Exit mobile version