அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது.

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இருந்தபோதிலும், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாததால் தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்தநிலையில், மீதமுள்ள 16 பேருக்கு எதிரான வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.  குணசேகரன் என்பவரை விடுவித்த நீதிமன்றம், மீதமுள்ள 15 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரத்தை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.

Exit mobile version