ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டா வண்ணம் நூதன முறையில் விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படும் தெருக்களில் நகராட்சி ஊழியர்கள் கோலமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி சுமார் 33 வார்டுகளை கொண்டது. நகராட்சி சார்பில் தூய்மையை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் பொதுமக்கள் தெருக்களில் குப்பைகளை கொட்டிய வண்ணமே உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் குப்பைகளை கொட்டும் இடத்தில் அவற்றை கொட்டா வண்ணம் கலர் பொடியை கொண்டு கோலம் வரைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version