செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளரை வெட்டிக் கொல்ல முயற்சி

திண்டுக்கல்லில், பட்டப்பகலில் செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளரை, மர்ம நபர்கள் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

திண்டுக்கல் பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் மீரான் பாபு. இவர் அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடையில் இருந்து வெளியே வந்த மீரான் பாபு, வேலை நிமித்தமாக சட்டாம்பிள்ளை தெரு பகுதியில் நடந்து சென்றார். அப்போது, 3 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை வழி மறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக தாக்கியது. பட்டப்பகலில் நடுரோடில் மீரான் பாபுவை மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மீரான் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலை முயற்சி சம்பவம், முன் விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version