ஏ.டி.எம் மோசடியை தடுக்க புதிய நடவடிக்கை

இ.எம்.வி. சிப்கள் இல்லாத பழைய ஏ.டி.எம். கார்டுகளை வரும் ஜனவரி மாதம் முதல் செயலிழக்கவைக்கப்போவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்து உள்ளது. இ.எம்.வி. சிப்கள் இல்லாத ஏ.டி.எம்.கார்டுகளில் என்ன சிக்கல்? அவற்றைப் பயன்படுத்துபவர்கள் என்ன செய்ய வேண்டும்? அதற்கு பதில் இதோ…

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஏ.டி.எம். கார்டுகள் மேக்னடிக் ஸ்ட்ரிப் எனப்படும் காந்தப் பட்டைகள் மூலம் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் மோசடியாளர்கள் இந்த ஏ.டி.எம். கார்டுகளில் போலிகளை எளிதாக உருவாக்கி பெரும் மோசடிகளில் ஈடுபட்டனர்.

இதனால் கூடுதலாக இ.எம்.வி. சிப்கள் பொருத்தப்பட்ட நவீன ஏ.டி.எம். கார்டுகள் உருவாக்கப்பட்டன. இவற்றை ஹேக் செய்வது கடினமானது என்பதால் இவை பாதுகாப்பு
மிக்கவை. எனவே இந்திய வங்கிகளை இ.எம்.வி. சிப் உள்ள புதிய கார்டுகளுக்கு மாறும்படி ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.

இதனால் பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளைப் புதுப்பிக்கும் போது அவற்றை இ.எம்.வி. கார்டுகளாக மாற்றிக் கொடுத்தன. ஆனாலும் தங்கள் ஏ.டி.எம். கார்டுகளைப் புதுப்பிக்காத பல வங்கி வாடிக்கையாளர்கள் இன்னும் பழைய வகை ஏ.டி.எம். கார்டுகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்கள் முன்பு இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியோடு ஸ்டேட் வங்கியின் இ.எம்.வி. சிப் பொருத்தப்படாத அனைத்து காந்தப்பட்டை ஏ.டி.எம். கார்டுகளும் செயலிழந்துவிடும், எனவே அதற்குள்ளாக வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டுகளை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகி உள்ளது. இல்லை என்றால் அவர்களால் ஏ.டி.எம். சேவையைப் பயன்படுத்த முடியாது.

பாரத ஸ்டேட் வங்கியின் யோனோ செயலி மூலமாகவோ, ஆன்லைன் பாங்கிங் மூலமாகவோ, ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ள கிளைக்கு நேராகச் சென்றோ வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஏ.டி.எம். கார்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இந்த சேவைக்குக் கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை.

பாரத ஸ்டேட் வங்கி அல்லாத பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும், தங்கள் ஏ.டி.எம். அட்டையில் இ.எம்.வி. சிப் இல்லை என்றால் உடனே தங்கள் வங்கியை அணுகி அவற்றை மாற்றிக் கொள்வது நல்லது, இதன் மூலம் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனையை உறுதி செய்ய முடியும்.

Exit mobile version