அத்திவரதர் வைபவம் நிறைவு: பிரிய மனமின்றி விடை தரும் பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பூஜைகளுக்கு பிறகு அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர் இன்று மீண்டும் வைக்கப்படுகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. 31 நாட்கள் சயன கோலத்திலும், அதற்கடுத்த நாட்களில் நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளித்தார். 46 நாட்களாக வண்ண நிற பட்டாடைகளில் அருள்பாலித்த அத்திவரதரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதனால் 47 நாட்களும் காஞ்சிபுரம் விழாக்கோலமாக காட்சி அளித்தது. இதையடுத்து, 48-வது நாளான இன்று அனந்த சரஸ் குளத்தில் உள்ள பாதாள அறையில் அத்திவரதர் வைக்கப்படுகிறார். ஆகம விதிகளின் படி பூஜைகள் செய்யப்பட்டு அதன் பிறகு குளத்திற்குள் சயன கோலத்தில் அத்திவரதர் வைக்கப்படுகிறார். இன்று முதல் அடுத்த 40 ஆண்டுகள் அனந்த சரஸ் குளத்திற்குள் சயன கோலத்தில் அத்திவரதர் ஓய்வெடுக்கிறார். இதையடுத்து 2059-ஆம் ஆண்டுதான் தரிசிக்க முடியும் என்பதால் பிரிய மனமின்றி அத்திவரதருக்கு பக்தர்கள் விடை தருகின்றனர். அத்திவரதரை குளத்திற்குள் வைக்கும்போது மழை பெய்து குளம் நிரம்பும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Exit mobile version