ஆசிய வளர்ச்சி வங்கி தமிழகத்திற்கு ரூ.1190 கோடி நிதியுதவி

தமிழகத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் இந்திய அரசு உதவியுடன் 1,190 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகத்தில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றல், வடிகால் வசதி ஆகிய கட்டுமானங்களுக்காக 1,190 கோடி ரூபாயை கடனாக வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி, இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழக அரசின் தொலைநோக்கு திட்டம் 2023-க்கு தங்களது ஆதரவு எப்பொழுதும் உண்டு என்று தெரிவித்துள்ள ஆசிய வளர்ச்சி வங்கி, தமிழக நகரங்களை உலக தரத்தில் உயர்த்த கடனுதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த கடனுதவி மூலம் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், ராஜபாளையம் உள்ளிட்ட 10 நகரங்கள் பயனடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுமானங்களால் இயற்கை பேரிடர் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு, நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் தவிர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version