ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அதன்படி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்தால், இதுவரை 3 முறை கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விசாரணை கமிஷனின் முடிவுகள் இன்னும் அறிக்கையாக தாக்கல் செய்யப்படாத நிலையில் விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் இருக்கும் நீதிபதி ஆறுமுகசாமிக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version