தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை

காதல் திருமணம் செய்ததற்காக பிரணய் – அம்ருதா தம்பதி கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் தெலங்கானாவில் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை, பெற்றோர் அடித்து கொலை செய்து, எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள தலமடுகு கிராமத்தை சேர்ந்தவர் சக்தி அண்ணா. இவரது மகள் அனுராதா வேறு சாதி இளைஞரான லட்சுமி ராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அனுராதாவின் காதலை அறிந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அவரை கணவரிடமிருந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனுராதாவை அடித்து கொன்ற அவரது குடும்பத்தினர், உடலை சாக்குப்பையில் கட்டி அருகிலுள்ள வயலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, சாம்பலை அருகில் இருந்த நீர்நிலையில் கரைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், முதற்கட்டமாக அனுராதாவின் தந்தை மற்றும் சகோதரரை கைது செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்ததாக பிரணாய் – அம்ருதா தம்பதி கொல்லப்பட்ட நிலையில், தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version