காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு: 5 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 5 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒரு தீவிரவாதியை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎப் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சம்பவத்தில், 5 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 6 சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் சிஆர்பிஎப் வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அல் உமர் முஜாஹிதின் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version