60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி!

சின்னத்திரை படப்பிடிப்பை 20 நபர்களுடன் துவங்கலாம் என உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்போது 60 நபர்களுடன் படப்பிடிப்பு நடத்தலாம் என முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். 

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 21-ம் தேதி முதல் நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தற்போது அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு நாளை முதல் படப்பிடிப்பை நடத்தாலம் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Exit mobile version