தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்து போராடும்

எல்லைத் தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்து போராடும் என்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் சார்பில் அதிமுக, திமுக எம்.பி.க்கள், நவநீதகிருஷ்ணன் மற்றும் கனிமொழி கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற எதிர்கட்சிகள், தீவிரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளில் துணை நிற்பதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த விவகாரத்தில் பிராந்திய கட்சிகளின் கருத்துக்களை மத்திய அரசு கேட்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்து போராட இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நாட்டு மக்கள் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுவரும் எல்லை தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இணைந்து போராடுவார்கள் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

Exit mobile version