அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின், உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதயம் மற்றும் கிட்னி, சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

கடந்த 2014-19 பா.ஜ.க ஆட்சியில் அருண் ஜெட்லி, மத்திய நிதி அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது, உடல்நிலை காரணமாக, மீண்டும் அமைச்சர் பதவி வேண்டாம் என ஜெட்லி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version