உள்ளாட்சிக்கான மறைமுக தேர்தலில் அதிகமான இடங்களை வென்றது அதிமுக

நேற்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அதிகமான இடங்களை வென்றுள்ளன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதி நடைபெற்றது. இதில் 515 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் 513 இடங்களுக்கும், 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றியங்களில்,  5 ஆயிரத்து 88 இடங்களுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில், அதிமுக 214 இடங்களையும், ஒன்றிய உறுப்பினர்களில் ஆயிரத்து 781 இடங்களையும் பிடித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சியினரும் கடந்த 6ம் தேதி பொறுப்பேற்றனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில், அதிமுக 13 இடங்களையும்,  திமுக 12 இடங்களையும் கைப்பற்றின. ஒரு இடத்தில் பாமக வெற்றி பெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலுக்கான 27 இடங்களில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஒன்றியத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை, மொத்தமுள்ள 314 ஒன்றியங்களில் சில இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை. முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதன் படி, அதிமுக 140 ஒன்றியத் தலைவர் பதவிகளையும், 94 துணைத்தலைவர் பதவிகளையும் பிடித்துள்ளது. திமுகவை பொறுத்தவரை, 125 ஒன்றியத் தலைவர் பதவிகளையும், 107 துணைத் தலைவர் பதவிகளையும் வென்றுள்ளது.

Exit mobile version