அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது

விழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டமுன்வடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

கல்வியில் பின் தங்கிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் நலனுக்காக விழுப்புரத்தில் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட்டது. இதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டமுன் வடிவை சட்டப்பேரவையில் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் முழக்கங்களை எழுப்பிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியலின்போது, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, சாலைமறியலில் ஈடுபட்ட எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வாகனத்தில் போலீசார் அழைத்துச் சென்றனர்.

Exit mobile version